Tuesday 1 April 2014

மின்சாரக் கண்ணா…!




மின்சாரம் போய்விட்டது. உடனே என்ன செய்வது என்கிற கேள்வி வந்துவிடுகிறது. அது இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியவில்லை.


மின்சாரம், தண்ணீர், சமையல் எரிவாயு இம்மூன்றும் இல்லை என்றால்  அவ்வளவு தான். கை ஒடிந்தது போல் ஆகிவிடும். வீட்டுக் காரியங்கள் தேங்கி விடும் அல்லவா…? 

ஆனா… நாம செய்யாமல், பிறகு செய்து கொள்ளலாம் என நிறைய காரியங்கள் போட்டு வைத்திருப்போம். அது வேறு. என்ன நான் சொல்வது. அதுவும்… தேங்கி நிற்கின்ற காரியங்கள் தானே…?  ஆனா அதை எல்லாம் நாம, நம் மீது குறை சொல்லிக்க மாட்டோம். இது மூணும் இல்லை என்றால் நாம எல்லாத்தையும் சரியா செய்வது போல அவனவனைத் திட்டித் தீர்ப்போம். இதுக்கு அக்கம் பக்கத்து பெண்கள் எல்லாம் ஒரே கருத்தா குழுமிடுவாங்க.

மூடு அவுட் ஆகிடுச்சு…. மூடு அவுட் ஆகிடுச்சுன்னு புலம்புவோம். இல்லையா பின்ன…? நாம எப்போ நம் கண்ட்ரோல்ல இருந்தோம். இல்லையே…? அடுத்தவுங்க அதைச் சொன்னாங்க, இவுங்க இதைச் சொன்னாங்கன்னு…… திரும்பி திரும்பி மனசால் பார்த்து, வாயால சொல்லிக்கிட்டு இருப்போம் இல்ல. அது புடிக்காது தான் ஆனா விட முடியுதா..? 
            அரைத்த மாவை அரைப்போமா…?
            துவைத்த துணியை துவைப்போமா…?

இந்த பாட்டு மாதிரித்தான். மண்டைல நச்சுண்ணு இருக்கு. ஓ….!
மின்சாரத்தை மறந்துட்டு எங்கேயோ போயிட்டோமோ…. சரி சரி… சாயங்காலம் ஆறு மணிக்கு மின்சாரம் போயிடுத்து. வர ஒரு மணி நேரமாகும். என்னங்க மின்சாரம் அங்க மட்டுமா போகுது, இங்கயும் தாங்க. அது வரைக்கும் என்ன பண்ணுறது. ஏதாவது பண்ணுகிற மாதிரித்தான். “கழுதை கெட்டா குட்டிச் சுவரு”. அட என்னைதான் சென்னேன் கோவிச்சுக்கிடாதீங்க நீங்க.

இவரு சீக்கிரமா வந்தா..அதாங்க வீட்டுக்காரரு ஆபீஸ்ல இருந்து சட்டு, புட்டுன்னு வந்திருந்தாருன்னா பேசிக்கிட்டாவது இருக்கலாம். பிள்ளைகள் சின்னப் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுடன் நேரம் பறந்துவிடும். அவர்கள் வேலை காரணமாக வெளியூரில் இருக்கும் போது இந்த மாதிரி காலத்தைக் கழிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி, இப்படின்னு ரோசனை பண்ணிட்டு பால்கனிக்கு போனா கொஞ்சம் வெளிச்சமாத்தான் இருக்கு. காரு, வண்டி மற்ற இடத்து கடைகளின் வெளிச்சம் என வேடிக்கை பார்க்கலாம் தான். ஆனா குளிர் காத்து என்னமா அடிக்குது. 2 நிமிஷம் நிற்க முடியலை. பால்கனி மரக்கதவு திறந்து தான் இருக்கும். கண்ணாடிக் கதவை சாத்திட்டு சோபாவுல வந்து உட்கார்ந்தேன். அங்க உட்கார்ந்து பால்கனிப் பக்கம் பார்த்தா வானம், பக்கத்து கட்டடங்கள் தெரியும்.

வானத்துல நட்சத்திரங்கள் இன்னும் வரல. மேகமும் சாம்பல் நிறமா வானத்து கீழ் பக்கமா இருந்ததோட சரி வேற இடத்துல இல்ல. அப்படியே வானத்தை பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்த போது நேரம் ஆக ஆக ஒரு நிம்மதி வந்தது. இப்படி தனியாக அமர்ந்து இருக்கும் போது நமக்கும் இறைவனுக்குமான தொடர்பை உணர முடிகிறது. இயற்க்கையோடு தனித்து இருக்கும் போது எனக்கு ஒரு மாதிரி சந்தோஷமாக இருக்கும். எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கும்.

அப்போது எதிர் பக்க கட்டிடத்தின் பால்கனிக் கம்பியில் இந்நாட்டு தேசியக் கொடியை அவர்கள் பறக்க விட்டிருப்பது என் கண்ணில் பட்டது. இங்கு அரசியல் பிரச்சனை காரணமாக அங்கங்கு கொடி பரந்து கொண்டிருக்கிறது. அது காற்றில் பட படத்துக் கொண்டிருப்பது என் கவனத்தை ஈர்த்தது. வானம் விட்டு கொடியைப் பார்க்கலானேன். காற்று அடிக்கும் பக்கத்திற்கு தகுந்தார் போல் எதிர் பக்கம் விரிந்து, விரிந்து பறந்தது. காற்று குறையும் போது சற்று தொய்வாக பறந்தது. காற்று இல்லாத போது, அம்மாவுக்கு பயப்படும் குழந்தை போல கம்பியில் சுற்றிக் கொண்டு சமர்த்தான பிள்ளை போல் இருந்தது. காற்றுக்கு தகுந்தார் போல் பட படப்பது குதூகலிக்கும் குழந்தை போல் இருந்தது. சந்தோஷமாய் கைவீசி மகிழ்தல் தெரிந்தது.  

அதை வேடிக்கை பார்க்க பார்க்க என் மனம் அடங்கி அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. நமக்கு எதிர்த்தார் போல் அசைந்து, ஆடிட்டு ஏதாவது இருந்தால் மனசு அடங்கி இருக்கும் போல. அப்படி ஏதாவது இல்லையின்னா மனசு ஆடிட்டே இருக்கு இல்லையா…? என்ன வினோதம் இல்ல. ஏதாவது ஆடிட்டு,ஓடிட்டு இருக்கனும் போல..நமக்கு..? கடல் கூட இந்த மாதிரித் தான் ஆனா நாம கடற்கரைக்கு போகனும்.

சில சமயங்களில் பகலிலும் இப்போது மின்சாரம் போக ஆரம்பித்திருக்கிறது. கணிணியில் பார்க்கவோ, ரேடியோ கேட்கவோ முடியாது. வேலை இருந்தால் அப்போது வேலை பார்க்கலாம்.இல்லை என்றால் எதிர் கட்டடத்தின் கொடி தான் பொழுது போக்கு. அதை வேடிக்கை பார்ப்பது சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றிலும் ஏதோ….! இருக்கிறது அல்லவா…..? நாம் கவனிப்பதில் தான் இருக்கிறது. கொடிக்கு ரசிகை ஆகிவிட்டேன். அது கம்பீரமாக பறப்பது ஒரு உணர்வை கொடுக்கிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் அன்று நாம் அண்ணார்ந்து பார்ப்போம். கம்பத்தில் மேல் ஏறி மலர்கள் தூவி விரிந்து படபடத்து விரைப்பாக பறக்கும் போது நமது கைகள் தானாக  மேல் சென்று வணக்கம் செலுத்தும். நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு எழும். நமது தேசிய அன்னை, நான் இருக்கிறேன் என்று சொல்வது போலத் தோன்றும். தொலைக்காட்சியிலோ, திரைப்படத்திலோ, புகைப்படமாகவோ, வேறு எதிலாவதோ பார்க்கும் போது நாம் அனைவருக்கும் ஒரே உணர்வு தான் பொங்கும். என் மனதிலும் ஒரு பற்றுணர்வு தோன்றி பறந்து கொண்டிருக்கிறது. தாய் மண்ணும், தாய் நாடும் இரத்தத்தில் கலந்து மூச்சில் வாழும் ஒரு “சக்தி” அல்லவா. வந்தே மாதரம். ஜெய் ஹிந்.

சுவாரஸ்யம், அதனால் தான் இப்படி இதை என்னால் எழுத முடிந்தது. உங்களிடமும் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது. 

           “மின்சாரக் கண்ணா  என் மன்னா…..!!!”

என்னை எழுத வைத்த மின்சாரத்திற்கு நன்றி.  



R.Umayal Gayathri

2 comments:

  1. ரசிக்கும் வைத்தது + ஆலோசனைகளும் நன்று...

    ReplyDelete