Tuesday 10 December 2013

நம்முள் பதில் - சிறுகதை -2

                                                           

                           நம்முள் பதில்




என்ன இது திடீரென்று, ஒரே சாரலா, பனி மூட்டமா இருக்கே?  சூரிய வெளிச்சம் மங்கலாகியது. சுற்றுப்புறத்தில் எல்லோரும் என்னமோ, ஏதோ என்று…அத்திசையை நோக்கி ஓடலாயினர்.

ரோட்டில் நடந்து கொண்டிருந்த சீதாவுக்கும் விழிகள் பிதுங்கின. அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆறு திடீரென்று வெள்ளப் பெருக்கெடுத்தது. அது மட்டுமல்ல சமமாக ஓடிக்கொண்டு இருந்த ஆறு மேம்பாலத்தில் இருந்து வருவது போல் வந்து கொண்டிருந்தால்….!!! அம்மாடியோவ்…..!!! காட்டாற்று வெள்ளம், நொங்கும் நுரையுமாய்….!!!

சற்று நேரத்தில் ஒரே பரபரப்பு….! வேடிக்கை பார்க்க வந்த கிராமத்தினர்களுக்கு ஆச்சரியம். அதுவும் வெள்ளம் வெளியில் வராமல் ஒரே சீராக ஓடியது அதை விட ஆச்சரியம். இன்னும் ஆச்சரியம் மேம்பாலம் போல் மேலிருந்து வருவது.

ஐய்யோ…! அலறல்… யாரோ விழுவது தெரிகிறது. கூட்டத்தில் பரபரப்பு யாரது…? ஐய்யோ… காப்பாற்ற முடியாதே…! ஒரு விதமான பயம் அனைவருக்கும் அப்பிக்கொள்ள இரண்டடி பின் நகர்ந்தனர். ஒரு நொடியில் உருவம் காணாமல் போனது.

வெள்ளத்தில் விழுந்த சீதா தலை தூக்கிப்பார்க்க, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாயும் வெள்ளம் தான் தெரிந்தது. எதிர் நீச்சல் போட்ட படி மேலே வருவது நாம் தானா என்பதை சீதாவாள் நம்பமுடியவில்லை.  எப்படி நம்மால் முடிகிறது?   நீச்சல் தெரியாத நாம் எப்படி நீந்துகிறோம்…!  ஒரே ஆச்சரியம்.  மனம் தாழவில்லை.  கரை ஏறி ரோட்டிற்க்கு வந்து சேர அம்மாடி என்ற  வார்த்தை தொண்டையில் அடைத்து நின்றது. என்ன ஒருத்தரைக் கூட காணோம்,  சுற்று முற்றுப் பார்க்க…ஆறு மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தது. ஆற்றுக்கு நன்றி செல்ல…சீதா என யாரோ அழைப்பது கேட்டது. 

கண்திறந்து பார்த்தால் அம்மா நின்று கொண்டிருந்தால்.  என்ன ஐயோன்னு கத்தின? பாரு உடம்பெல்லாம் வேர்வையில தொப்பலா நனைந்து போயிருக்கு பார். ஏதாவது கனவு கினவு கண்டியா? கரண்டு போனது கூட தெரியாமல் துங்குற… எந்திரி. விடிஞ்சு எவ்வளவு நேரமாச்சு என அம்மா போக, ஓ… நாம கனவு தான் கண்டோமா…! அப்பப்பா நிஜம் போலல்ல இருந்தது.

கனவில் இருந்து மீண்டு வந்தாலும், ஏனோ  ?  சந்தோஷமாய் இருந்தது. இன்று எழுதப்போகிற  பரீச்சை  நன்றாக  எழுதுவோம்  என்கிற  நம்பிக்கை  வர  கிடு கிடுவென தயாராகிப் புறப்பட்டாள். நம் பயம் தான் கனவா வந்து, நம்மால் முடியும்கிறதையும் உணர்த்தி இருக்கு. கால்கள் கல்லூரியை நோக்கி நடை போட்டன.     

என்ன… என் கூட சேர்ந்து நீங்களும் பயந்து விட்டீர்களா ? நான் நல்லா பரீட்சை எழுத ஆசிர்வாதம் பண்ணுங்க. நம்முள் பதில் இருக்கு வரட்டா.


ஆர்.உமையாள் காயத்ரி.



No comments:

Post a Comment